கனவு மெய்ப்பட வேண்டும்
தென்திருப்பேரை இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள சுவாமி மகர நெடுங் குழைக்காதனுக்கு ப்ரஹ்மோத்சவம் நடைப் பெற்று வருகிறது. இன்று ஐந்தாம் திருநாள். பெருமாள் கருட வாகனத்தில் சேர்வை சாதிக்கிறார். செம்பொன் குன்றின் மேல் தோன்றினான் என்று கம்பன் சொல்வது போல் இருக்கும் இந்த கருடவாஹன காட்சி. தங்கத்தால் ஆன ஐந்தடி கருடன் மேல் அருமையான கொலு மேளத்துக்கும் மல்லாரிக்கும் அசைந்து வருவது ஒரு தேவலோக காட்சி போல் இருக்கும். நம்மாழ்வார் வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி என்ற பாசுரத்தில் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளை கடாவுகின்ற ஆற்றை காணீர் என்கிறார். தன்னை பெண்ணாக பாவித்துக் கொண்டு, மணிவண்ணன் புள் அரசனாகிய கருடன் மீது பறக்கும் காட்சியை பாடுகிறார். பொதுவாக வைணவத் திருக்கோயில்களில் பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரே கருடன் சந்நிதி அமைந்து இருக்கும். தென்திருப்பேரையில் வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் காணவும் கேட்கவும் வழி விட்டு சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று பெருமாள் சொல்ல சந்நிதி கருடன் வழி விட்டு விலகி இருக்கிறார் . முன்பொரு நாள் எங்கள் ஊரின்...